Monday, February 16, 2015

ஒருமுறை சொல்லிவிடு


 ”இன்று சொல்லிவிட வேண்டும்” என்றெண்ணியபடி காரை நிறுத்தினேன்.  சுதா வாசலிலேயே நின்றிருந்தாள். அவள் காத்திருக்கிறாள் என்பதே ஒரு கிளர்ச்சியளித்தது. எனக்காக அவள் காத்திருப்பது புதிதல்ல, ஆனால் இன்று அது ஒர் அற்ப மகிழ்வையளித்தது. அற்பத்தனங்களில் தானே காதலின் அற்புதகனங்கள் ஒளிந்திருக்கிறது. அரக்குவண்ணப் புடவை. அவள் சேலையுடுத்தவதைக் குறித்து வெண்பா எழுத வேண்டும். அத்தனை நேர்த்தி. அவள் செய்யும் எல்லாவற்றிலும் ஓர் நேர்த்தியிருக்கும். அவளுக்கே உரிய நேர்த்தி. அப்படி எழுதினால் அது நிறையிசை வெண்பாகவே இருக்கும். காரைத் திறந்து என் இடதுபுறத்தில் அமர்ந்துகொண்டாள். ”இன்று கண்டிப்பாக சொல்லிவிட வேண்டும்” என நினைத்தவாறே காரை நகர்த்தினேன்.
“எங்க போறோம்?” என்று கேட்டாள்.
“பீச்” என்றேன்.
“இந்நேரத்திலயா?”
“ஏன் இந்த நேரத்துக்கென்ன?”
சற்று யோசித்தவள் “சரி, ஆனா சீக்கிரம் வந்துடனும், நிறைய வேல இருக்கு” என்றாள்.
”ஓகே”.
எப்படிச் சொல்வது. இத்தனை நாட்களில் இப்படித் தோன்றியதேயில்லை. ஆனால் சில நாட்களாகவே நெஞ்சில் ஒரு குறுகுறுப்பு, நாளுக்கு நாள் என்னை வாட்டுகிறது. அவளிடம் இதை சொல்லியாக வேண்டுமென்ற தவிப்பு. சொன்னால்தான் அவளுக்கு தெரியுமென்றில்லை. எங்களுக்குள் வார்த்தைகளின் தேவையற்றுபோய் பல நாட்களாகிறது. இருப்பினும் அவளை நேசப்பதை நான் உரைத்தாகவேண்டும். ”இனி எனக்கு நீதான்” என அவள் விழிகளைப் பார்த்துச் சொல்லவேண்டும். ஆனால் எப்படி ஆரம்பிப்பது? காதலில் தொடக்கமும் முடிவும் எப்போதும் சற்று சிரமம் தான் நிகழ்த்திவிடுதல் சுலபம், நிகழ்வதுதான் காதல். சட்டென சொல்லிவிடலாம், அது சரியாக அமையவில்லையென்றால் சொல்வதற்கான பொருளை அது முழுவதுமாக பரிமாறாது, அவை வெறும் வார்த்தைகளாய் காற்றில் மிதக்கும். அதற்கோர் தேவகனம் வேண்டும், ஒர் உன்னத நொடி.
காரின் சவுண்ட்சிஸ்டத்தை உயிர்பித்தேன். ”பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்..” பிபிஎஸ்சின் வசீகரக்குரல், வெளியே வேடிக்கைப் பார்த்தபடி லேசாக தொடையில் தாளமிட்டாள், நான் பாடலுடன் சேர்ந்து விசிலடிக்கத் தொடங்கினேன். சட்டெனத் திரும்பியவள் விழிகளில் ஆச்சரியம் தாளமிட என்னைப் பார்த்தாள். நான் என்ன என்பதைப் போல் புருவத்தை உயர்த்த, அவள் ஒன்றுமில்லையென தலையசைத்தாள். அடிக்கடி அவளைத் திரும்பி பார்த்தபடி வந்தேன். பாடல் முடியும் தருவாயில்,
“சுதா, நீ ரொம்ப அழகாருக்க”
திரும்பியவள் உறைந்தே போனாள். கண்கொட்டாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். கயல்விழிகள்.
“நிஜமாதான் you look beautiful today” என்றேன்.
லேசாக சிரித்தவள் “ இன்னைக்கு மட்டும் தானா?” என்றாள் குறும்பாக,
“இல்ல. ரொம்ப நாளாவே”
“ரொம்ப நாளான்னா?”
“நான் உன்ன பாத்த நாள்ல இருந்து”. என்றேன்.
சிரித்தாள், சிரித்தேன், சிரித்தோம்.
“ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக் கிளியே அழகிய ராணி, அருகே வரலாமா” பிபிஎஸ் எங்களைத் தாலாட்டிக்கொண்டிருந்தார்.
கடற்கரையை அடைந்தோம். காரை நிறுத்தி செருப்பைக் கழட்டி காரினுள்ளே வைத்துவிட்டு வெறும்காலில் நடக்கத்தொடங்கினோம். கால்கள் மண்ணையறிந்து எத்தனை நாட்களாகிறது.  மணலில் நடக்கையில் அவள் கால்கள் இடற என் கையைப் பிடித்துக் கொண்டவள், விழியுயர்த்தி என்னைப் பார்த்தாள். அவை என்னிடம் ஏதோ கேட்க விழைந்தன, கண்களின் பேச்சுக்குத்தான் எத்தனையர்த்தங்கள். இதோ இங்கே ஓர் தேவகனம் என்னைக் கடந்துகொண்டிருக்கிறது. நான் என் மனதையுரைக்கவேண்டும், ஆனால் நான் சொல்லவில்லை. ஏதோ ஓர் தயக்கம். என்னால் சொல்லமுடியவில்லை, என்ன காரணம்? நெஞ்சில் ஒரு பரிதவிப்பு, நல்ல வாய்ப்பு பரிபோனது. ஆனால் என்ன செய்ய பள்ளிக்கூடச் சிறுவர்கள் போல் கண்ணாடி முன் நின்று கேவலமாக ஒத்திகைப் பார்த்துவரவா முடியும். நான் சொல்லியிருக்க வேண்டும். இனி அந்த நொடியை எண்ணி புலம்பிக்கொண்டிருக்கப் போகிறேன்.
”அங்க உட்காரலாமா?” ஒரு இடத்தைச் சுட்டி கேட்டாள். நான் அப்போது தான் கவனித்தேன். கடற்கரையெங்கும் ஏகத்திற்கும் கூட்டம்.  அவள் காட்டிய இடத்தில் சென்றமர்ந்தோம். கடலுக்கும் மேலே தொடுவானத்தில் பூர்ணசந்திரன் எங்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான். கடல் என் மனதைப்போல ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. பேரலைகள்.
ஒரு காதல் ஜோடி அலையில் விளையாடிக்கொண்டிருந்தது. எனக்கு இவள் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் அலைக்குள் தள்ளிவிடவேண்டும்போலிருந்தது.
“அலையில கால நனைக்கலாமா?” என் மனதைப் படித்துவிட்டாள்.  
“ம்ம்” என்றெழுந்தேன். கைநீட்டினாள். பிடித்துத் தூக்கினேன். எழுந்தவள்..
“அப்படியே கொஞ்ச தூரம் நடக்கலாம்” என்றாள். அவளுக்கும் என்னிடம் ஏதோ சொல்லவேண்டும். நான் தலையசைத்தேன்.
இருவரும் கலங்கரை விளக்கம் நோக்கி சிறிது தூரம் நடந்தோம். அலைகள் மாறி மாறி எங்கள் கால்களை முத்தமிட்டன.
“என்ன விஷயம்” என்றாள்.
“ஒன்னுமில்லையே”
“இல்ல ஏதோ இருக்கு”
“நிஜமா இல்ல”
“எனக்குத் தெரியும் எதோ விஷயம் இருக்கு”
“அப்போ அது என்ன’னு நீயே சொல்லு”
” அனு போன் பண்ணியிருந்தாளா?” என் முகம்சுருங்கியது. நான் எதிர்பார்த்தது வேறு.
“ஆமா” என்றேன்.
“என்ன சொன்னா?”
“நான் போன் எடுக்கல”
”ஏன்???”
“எதுக்கு அவளோட நான் பேசனும். நான் வேண்டாம்னு தூக்கியெறிஞ்சுட்டு போனவதான அவ”
“அதில்ல” அவளேதோ சொல்லவர
”அவள பத்தி பேசாத, ப்ளீஸ்.”
“சாரி” என்றாள்
இருவரும் எதுவும் பேசாமல் நடந்தோம். இருவருக்குமிடையே மௌனம் புகுந்து கொண்டது. என் முகத்தில் கோபம் குடியேறியது. இதே கடற்கரையில் அனு என் தோளைக் கட்டிக்கொண்டு நடந்தது நினைவுக்கு வந்தது. அந்த நினைவிலிருந்து வெளியே வர முயன்றேன். சுதா என் முன் நடந்துகொண்டிருந்தாள். ஓரலை வந்து காலகளை நனைத்தது. அவள் கால்களைப் பார்த்தேன். பாதங்கள் நனைந்திருந்தது, சேலை முனைகளில் துளி ஈரமில்லை. நடையில் கூட இருக்கும் அவளின் நேர்த்தி எனக்கு பிடிபடவேயில்லை. அவளே மௌனத்தை உடைத்தாள்.
”அணு எனக்கு போன் பண்ணியிருந்தா”
“ஓ ரெண்டு பேரும் ஒன்னுசேர்ந்தாச்சா, நடுவுல நாந்தான் பைத்தியக்காரன் இல்ல”
“அப்படி எல்லாம் ஒன்னுமில்ல, போன் பண்ணா பேசினேன்”
“என்னவாம்”
“அடுத்த வாரம் சென்னை வராலாம், உங்களயும் என்னையும் பாக்கனும்னு சொன்னா?”
“நீ வேணும்னா போ, நான் வரல”
“ என்ன மணி இது?” எப்போதாவதுதான் பெயர் சொல்லுவாள். அது அவளின் அஸ்திரம். அதற்கு எப்போதும் நான் வீழ்ந்துவிடுவேன். ஆனால் இன்று என் கோபம் போவதாயில்லை.
“அவ செஞ்சது எதையும் நான் மறக்கல, அவ மனசுக்கு பிடிச்சத அவ செஞ்சா ஆனா அதுக்கு என்ன ஏன் பலியாக்கினா? நிச்சயதார்த்தத்தப்போ கூட ஒரு வார்த்த சொல்லல. என்ன விடு, உன்கிட்ட அவ எதையாவது மறச்சிருக்காளா, அட்லீஸ்ட் உன்கிட்டயாது சொல்லிருக்கலாம்ல, அந்த அவமானத்த என்னால மறக்க முடியாது சுதா, நீ சொன்னாலும் நான் வரப்போறதில்ல”
“அவ சொல்லிருந்தா சம்மதிச்சிருப்பியா?, அவளுக்கு வேற வழி தெரியல”
“அப்போ அவ பண்ணது சரினு சொல்றியா? அது உனக்கு துரோகமா தெரியல? என்ன பொருத்தவரைக்கும் அது மண்ணிக்க முடியாத தப்பு.”
“மண்ணிக்க முடியாத தப்புன்னு எதுவும் இல்ல மணி. தப்பு செய்றதே மண்ணிச்சுருவாங்கன்ற நம்பிக்கைல தான். அவளுக்கு நம்மள விட்டா யாரிருக்கா? நமக்கும் அவளத்தவிர யாருமில்ல” அவள் சொல்லிமுடிக்கும்முன்.
“யாரும் வேண்டாம். நமக்கு இனி யாரும் வேண்டாம். உனக்கு நான், எனக்கு நீ. அவ்வளுவுதான்”
“ என்ன பேத்தல் இது, அணு நம்ம பொண்ணு. அவ ஓடிப்போய்ட்டான்னு இத மாத்திட முடியாது. இத்தன வயசுலயும் உனக்கு நான் மட்டும் போதும் வேற யாரும் வேண்டாம்னு சொல்ற. அணு சின்ன பொண்ணு, அவ வயசுல அவளுக்கு அந்த பையன் தான முக்கியமா தெரிவான். தப்புபண்ணீட்டான்னு அவள அப்படியே விட்டுடமுடியாது. அவளோட நல்லது கெட்டத பாத்து செய்ய வேண்டியது நாமதான்”
“நல்லது கெட்டது எதையும் அவ நம்மள கேட்டு முடிவெடுக்கல சுதா”
“இல்லங்க, இன்னைக்கு அவ உங்களுக்கு போன் செஞ்சது, உங்ககிட்ட மண்ணிப்பு கேட்க மட்டுமில்ல… அவ கர்பமா இருக்கா. இந்த நேரத்துல நாம அவ கூட இருக்கனும்.”
நான் எதுவும் பேசவில்லை. அணுவை உடனே பார்க்கவேண்டும்போலிருந்தது. என் கோபத்தைத் தேடிக்கொண்டிருந்தேன்.
“நானும் அவ மேல கோவமாதான் இருந்தேன். ஆனா அவ இதசொன்னதுக்கு அப்புறம், அந்த கோவமெல்லாம் எங்க போச்சுன்னு தெரில. அவள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துரலாம். என்ன சொல்றீங்க??”
நான் மௌனமாகவே இருந்தேன்.
“ப்ளீஸ் சரி’ன்னு சொல்லுங்க.”
நான் சரியென தலையசைத்தேன். அவள் முகம் மலர்ந்தது, சந்திரன் மேகத்திற்கு பின் சென்று ஒளிந்துகொண்டான். என் கைகளைக் கோர்த்துக்கொண்டாள்.
“லவ் யூ” சொன்னது சுதா. நான் ஸ்தம்பித்து நிற்க என்னைப் பார்த்து புன்னகைத்தாள். அவளைப் பெண் பார்க்க சென்றபோது முதலில் என்னைப் பார்த்து சிரித்த அதே சிரிப்பு. 30 வயது குறைந்ததைப் போல் உணர்ந்தேன்.
“இத சொல்லத்தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்” என்னைப் பார்த்து புருவமுயர்த்தியவள்
“அப்ப சொல்லுங்க”
“ஐ லவ் யூ” ஐம்பத்தைந்து வயதில் வெட்கப்பட்டுக்கொண்டிருந்தேன்.


Saturday, February 14, 2015

சபிக்கப்பட்ட தேவதூதன்

மஞ்சள் நிற ஜீரோ வாட்ஸ் வெளிச்சம் அறையெங்கும் பரவியிருந்தது. நான் சுவர்கடிகாரத்தைப் பார்த்தபடி படுத்திருக்கிறேன். இவ்வுலகில் அந்த கடிகாரத்துடன் தனித்துவிடப்பட்டவனைப் போல். என்னை எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் காலம் தன்னைக் கடத்திக்கொண்டிருக்கிறது. நொடிமுள்ளின்  அந்த அந்தமில்லா பயணம் என்னை வெகுவாக துன்புறுத்துவதை அதற்கு எப்படிச் சொல்வது. நள்ளிரவு. நிசப்தம். தனிமை. அனைத்தும் என்னை வாட்டிக்கொண்டிருக்கிறது. இவை எதுவும் புதிதல்ல, பதின்பருவத்தின் தொடக்கத்திலிருந்தே நான் தனிமைக்கு வாக்கப்பட்டவன் தான். தனியன். தனிமை என்றால் யாரும் உடன் இல்லாதிருக்கையில் மட்டுமல்ல,  வகுப்பறையிலும், கடைவீதிகளிலும், மைதானத்திலும், திருவிழாக்களிலும் இன்னும் கூட்டம் கூடும் எல்லா இடங்களிலும் கூட நான் தனியன் தான். காரணம் இதுவென்று தெரியாது. காரணம் இருக்கிறதா என்றுகூட தெரியாது. ஏனோ, நான் வருந்துவதெல்லாம் பிறருக்கு சிரிப்பையளிக்கும், என் சிரிப்பினால் வருத்தமைடந்தவர்களும் உண்டு. எனவே நான் தனிமையை தேடிக்கொண்டேன், அதற்காக நான் தனிமை விரும்பியும் கிடையாது. கல்லூரியில் அம்மாஞ்சி, தயிர்சாதம், ட்யூப் லைட் என்றெல்லாம் அழைக்கப்பட ஒருவன் இருப்பானல்லவா? அது நானே. கடந்த மூன்றரை வருடங்களாக என்னையும் அப்படித்தான் அழைத்துவருகிறார்கள். ஆகவே தனிமை எனக்கு புதிதல்ல, ஆனால் நாளை மற்றுமொரு நாளல்ல. இதோ இன்னும் சில வினாடிகளில் எனக்கு பிறந்தநாள். இந்நாளை உலகமே கொண்டாடக் காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் நினைப்பது சரிதான். நிச்சயமாக நான் பிறந்ததற்காக அல்ல. நாளை பிப்ரவரி 14. மனித வாழ்க்கயின் உன்னதம் காதல். உயிர்களின் கொண்டாட்டம் காதல். அத்தகைய காதலைக் கொண்டாட ஒரு தினம். அந்நாளில் பிறந்த நான் 22 வயதிலும் தனியன்.  It's a fucking irony you know. 57, 58, 59, 12.00. அறைத் தோழனின் செல்போன் ஒலிக்கிறது.

"Happy Valentine's day dear. mmuuaah "

வராண்டாவில் ஒருவன் அரை மணியாக கடலை வருத்துக்கொண்டிருக்கிறான். காதலி இல்லாததைவிட கொடுமை உடனிருக்கும் அனைவரும் காதலிப்பது. தனியனாக என்னால் என் பிறந்தநாளைக் கொண்டாடிவிடமுடியும். ஆனால் காதலர் தினம்???... இன்னும் சற்று நேரம் போனால் மன்மதன் சிம்புவாகிவிடுவேன். போர்த்திக்கொண்டு துங்கவேண்டியதுதான். அதற்குமுன் எனக்குள் சொல்லிக்கொண்டேன் "Happy Birthday Appu".

இரவு எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. புலரி கிரணங்களை   ஜன்னல் வழியாக பாய்ச்சிக்கொண்டிருக்கிறது. மூன்று மூதேவிகளும் அறையிலில்லை. அதிகாலை என்பது அவர்கள் அகராதியில் இருந்ததே இல்லை. இன்று ஏழு மணிக்குள் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆசிர்வதிக்கப்பட்ட சாத்தான்கள். செல்போனை எடுத்துப்பார்த்தால் எந்த notificationம் இல்லை, வால்பேப்பரில் புத்தர் தேமே என சிரித்துக்கொண்டிருந்தார். முகப்பத்தகத்தில் வாழ்த்தியிருந்த இருவருக்கும் நன்றி சொல்லி லைக்கிவிட்டு, குளிக்கச்சென்றேன்.

அறையைப் பூட்டிக்கொண்டு செல்கையில் அம்மா போன் செய்தாள். பேசிமுடிக்கையில் ஹாஸ்டல் வாசலையடைந்திருந்தேன். சாப்பிடப் பிடிக்கவில்லை மெஸ்ஸுக்கு செல்லாமல் திரும்பி வெளியே நடந்தேன். . இன்று சனிக்கிழமையாதலால் கல்லூரி விடுமுறை. எங்கே செல்வது?. அம்மா கோவிலுக்கு போகச்சொன்னது ஞாபகம் வந்தது. நேராக கோவிலுக்கு நடையைக் கட்டினேன். போன் சின்ன சினுங்களுடன் அலறியது. பேஸ்புக்கிலும், வாட்சாப்பிலும் காதல் கவிதைகளாக பொழிந்துகொண்டிருந்தனர். 25 நோட்டிபிகேசன், திறந்து பார்த்தால் 7 போட்டோக்களில் டேக் செய்யப்பட்டிருந்தேன். கடுப்பில் போனை அணைத்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தேன். தும்பிக்கையில் லட்டுடன் பிள்ளையார் வரவேற்றார். சம்பிரதாயமாக பிரகாரத்தைச் சுற்றி வணங்கிவிட்டு, பொங்கல் பிரசாத்தத்தை வாங்கிக்கொண்டு ஒரு தூணில் சாய்ந்தமர்ந்தேன்.

பொங்கலை வாயில் வைத்ததும் சூடு தாங்காமல் துப்பிவிட்டேன். நாக்கு நன்றாக சுட்டுக்கொண்டது. சுடும் விரல்களை மாறி மாறி வாயில் வைத்தெடுக்கையில் சிரிப்பொலி கேட்டு இடதுபுறம் திரும்பினேன்.

நீலப்பட்டுடுத்தி, விழிமையிட்டு, முல்லை மலர் சூடி, முழங்காலைக் கட்டிக்கொண்டு, வெண்பிறைத் தெரிய சிரித்துக்கொண்டிருந்தாளொரு மாடர்ன் மகாலட்சுமி. நான் நடுவிரலை சப்பிக்கொண்டிருந்தேன். சுதாரித்து எழுந்து கையை உதறிக்கொண்டு அசடு வழியச் சிரித்தேன். அவள் பெயர் நந்தினி. கல்லூரியில் என் ஜூனியர். பார்த்த ஐந்தாவது நொடியில் காதல் கொள்ளச்செய்யும் அழகு. அவளை நோக்கி நடந்தேன். 

“ஹாய் மச்சான்”

அவளுக்கு நேரெதிரே இருந்த தூணில் காலைநீட்டி சாயந்தமர்ந்து என்னைப் பார்த்து சிரித்தான் தமிழ் செல்வன். பெயர்தானப்படி, முப்பது என சொல்லச்சொன்னால் நுப்பது என்பான்.

நந்தினி கல்லூரியில் சேர்ந்த பொழுது அவளுக்கு அம்புவிட்டுக்கொண்டிருந்த மன்மதன்களில் தமிழும் ஒருவன். அப்போது என் அறைத்தோழன். அவன் என் அறையில் தங்கியதற்கும் ஒரு காரணமிருந்தது. யாருடனும் அதிகம் பேசாத நந்தினி அவ்வப்போது என்னிடம் பேசுவாள். அதற்கு காரணம் இசபெல்லா மேடம். ஒரு நாள் நூலகத்திலிருந்து வெளியே வந்த என்னை நிறுத்தி, நந்தினிக்கு அறிமுகம் செய்துவைத்து

“உனக்கு எஞ்சினியரிங் கிராபிக்ஸ்ல எந்த சந்தேகம் இருந்தாலும் அப்பு கிட்ட கேளு. he got centum in EG. he is a bright student" என்றார்.

 அன்று முதல் என்னைக் கடக்கும் போதெல்லாம் ஒரு மெலிதான புன்னகையை உதிர்ப்பாள். அந்த உறவை அடுத்தக் கட்டத்திற்கு எப்படி எடுத்துச்செல்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன். அதற்கும் அவளே வழிசெய்தாள். அந்த நாள் இன்னும் அப்படியே நினைவிலுள்ளது. தன்னை நந்தினியிடம் அறிமுகப் படுத்த சொல்லி தமிழ் என்னைப் பாடாய்படுத்திக் கொண்டிருந்தான். நான் முடியாது என மறுக்க, 

“மச்சி நீ என்ன சொன்னாலும் செய்றேன். ப்ளீஸ்” என கெஞ்சினான். 

நான் வன்மம் நிறைந்த விழிகளுடன் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன். 

“அப்படியா, சரி என் பேக தூக்கிட்டு வா” என்றேன். ச்சே இவ்வளவு தானா என் வன்மம். அவனும் அவ்வளவுதானா என்பது போல் என் பையை எடுத்து மாட்டிக்கொண்டு வந்தான். ஹாஸ்டலுக்கு செல்லும் வழியில் நந்தினி எதிர்பட்டாள். அவள் வருவதை தூரத்திலியே பார்த்தவன். 

“மச்சான் உண்ட தான் பேச வரா, அப்டியே என்ன இண்ட்ரோ பண்ணிவிடு”

அவன் சொன்னதை கவனிக்காமல் நடந்தேன். அவள் அருகே வந்ததும் “என்ன?” என்றேன்.

”லைப்ரரி போயிருந்தேன். EDC book எடுக்க. அங்க இல்ல, கேட்டப்போ உங்ககிட்ட இருக்குன்னு சொன்னாங்க. நெக்ஸ்ட் வீக் செமினார் இருக்கு. குடுத்தீங்கன்னா ரெபர் பண்ணீட்டு டூ டேஸ்ல திருப்பிக் குடுத்துடுறேன்” 

என்று அவள் சொல்லி முடிக்கும் முன்

“இந்தாங்க..” என் பையிலிருந்த புத்தகத்தை எடுத்து நீட்டினான் தமிழ். 

“ Actually நான் தான் லைப்ரரில இருந்து எடுத்துட்டு வந்தேன். என் லைப்ரரி கார்ட ப்ரெண்ட்ஸ் வாங்கி தொலச்சுட்டாங்க, அதான் அப்பு கிட்ட எடுத்து தர சொன்னேன். நீங்க கொண்டு போங்க, நான் எல்லாம் படிச்சுட்டேன்” என்றான். நான் கண்கொட்டாமல் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். மடைதிறந்த வெள்ளம்போல் பொய்சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு தெரிந்து அவனுக்கு முதல் வருடத்தில் மட்டும8 அரியர்கள் இருந்தன. 

“தேங்க்ஸ்” நந்தினி.

“ஹே... இதுல என்ன இருக்கு.. என் நம்பர் நோட் பண்ணிக்கோ, ஏதாவது டவுட்னா, கால் பன்னு” 

அதன் பிறகு அவர்கள் பேசியது எதையும் நான் கேட்கவில்லை. அவர்களும் என்னை கண்டுகொள்ளவில்லை. இன்று இதோ கோவில் தூணுக்கு பின் காதல் வடிக்கிறார்கள். கொஞ்சம் சுதாரித்திருந்தால் அங்கே தமிழுக்கு பதில் நான் இருந்திருப்பேன்.

“இங்க என்னடா பன்ற?” என்றான் என்னைப்பார்த்து. நான் பேசாமல் நின்றேன்.

“ஓ பொங்கல் வாங்கித்திண்ண வந்தியா?” சொல்லிவிட்டு அவனே சிரித்தான், அவளும் சேர்ந்துகொண்டாள். அழகான பெண்கள் அட்டு ஜோக்குகளுக்கு சிரிப்பதை எப்போது நிறுத்துவார்களோ..

 ”நீ என்னடா செய்ற இங்க?” என்றேன்.

“லவ்வர்ஸ் டே’ல, இவ கோவிலுக்கு போகனும்னு சொன்னா அதான்.”

அவள் வெட்கப்பட்டாள். “அட ராமா” என நினைத்துக்கொண்டேன். குரங்கு கையில் மாலை என்பதை கண்கூடாக பார்த்துகொண்டிருந்தேன். தாளமுடியாமல்

“சரி நான் வரேன்” என்றேன்.

“சாப்புட்டு போடா?”

“ இந்தா நீயே சாப்டு” பொங்கலை அவனருகில் வைத்துவிட்டு கிளம்பினேன்.

அவள் என்னைப் பார்த்து மெலிதாக சிரித்தாள்.

நான் இப்படியே ஹாஸ்டலுக்கு சென்றிருந்தாள் இந்த கதை இப்போதே முடிந்திருக்கும். என் விதி, நான்  ஹோட்டலுக்கு சென்றேன். மினிவிசிறிக்கு கீழே நன்றாக காற்று வரும் இடமாக பார்த்து அமர்ந்துகொண்டேன். சர்வர் வந்தார்,

”சூடா என்ன இருக்கு?”

 ”பொங்கல்”

பல்லைக்கடித்துக்கொண்டேன். 

“வேற”

”தோசை, சப்பாத்தி, பூரி...”

“ரெண்டு சப்பாத்தி” 

அவர் அங்கிருந்து நகர்ந்தார். 

சிரிப்பு சத்தம். திரும்பி பார்த்தேன். அனிதா. செல்போனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். நிமிர்ந்தவள் என்னையும் பார்த்து சிரித்தாள். 

“அப்பு!!!.. ஹாய்...” வியந்தபடி எதிரே வந்தமர்ந்தாள்.

“எப்படியிருக்க?” 

“நல்லாருக்கேன். நீ எப்டி இருக்க?” நான் கேட்டேன்.

“நீயே பாத்து சொல்லு” என்றாள்..

எனக்கு தெரிந்து எல்லா பெண்களும் தங்களை அழகுபடுத்திக்கொள்ள முயல்கிறார்கள். ஆனால்  வெகு சிலரே அதன்பின்னும் அழகாயிருக்கிறார்கள். இவள் அழகாயிருந்தாள். 

“you look pretty" என்றுதான் சொல்ல நினைத்தேன்.ஆனால்

“நல்லாதான் இருக்க” என்றுதான் சொல்ல முடிந்தது. அவள் முகம் சுருங்கியதுபோலிருந்தது. தன்னை வர்ணிக்காத ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. நேரடியாக வர்ணிப்பவனையும் பிடிப்பதில்லை. 

அனிதா என் Class mate. சரியான பையங்கொள்ளி,  தாழ்வு மனப்பான்மை கொண்டவள். என்னைவிட அதிகம். ஒரு கல்லூரியில் நடந்த கருத்தரங்கிற்கு எங்கள் கல்லூரியில் இருந்து என்னையும் அனிதாவையும் சேர்த்து குரு, கீர்த்தனா என நால்வர் சென்றிருந்தோம். கருத்தரங்கில் அனிதாவிடம் ஒரு பேராசிறியர் கேள்வி கேட்க, பதில் தெரிந்தும் பயத்தில் பேசமுடியாமல் ஆங்கிலமும் தமிழும் கலந்து  சொன்னதையே அவள் திருப்பிச்சொல்லி திணறிக்கொண்டிருந்தாள். அருகே அமர்ந்திருந்த பையன்களெல்லாம், மேஜர் சுந்தர்ராஜன் குரலில் பேசி அவளைக் கலாய்க்க. அனிதாவின் கண்கள் வேர்க்க, என் நாடி துடிக்க, எழுந்து சென்று அவளுக்கு உதவிவிட்டு மீதி கேள்விகளுக்கு  பதிலளித்துவிட்டு அவளையும் அழைத்து வந்து என்னருகில் அமர்த்திக் கொண்டேன். இப்போது மாணவர்கள் என்னையும் சேர்த்து கலாய்க்க தொடங்கினர்.  

அனிதாவிற்கு என்னை பிடித்துப்போனது. நன்றி ததும்பும் கண்களில் என்னைப் பார்த்தாள். நான் கெத்தாக கண்களைத் துடைக்குமாறு சைகை செய்தேன். கருத்தரங்கு முடிந்து வருகையில் ஒரு குழு மீண்டும் அனிதாவை கிண்டலடித்துக்கொண்டே வந்தனர். தலைகுனிந்து அழுத்தொடங்க அனிதாவை நானும் கீர்த்தனாவும் தேற்றிக்கொண்டிருக்க, குரு அவர்களிடம் சண்டையில் இறங்கினான்.

குரு எங்களைவிட இரண்டு வயது மூத்தவன். டிப்ளமோ படித்துவிட்டு எஞ்சினியரிங் சேர்ந்திருந்தான். முரடன். அது அவர்களுக்கு தெரியாதல்லவா, மூன்று பேரும் சேர்ந்து அவனை மொத்த, தடுக்க சென்ற எனக்கும் அடி, ஒரு வழியாக அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வருகையில் அவன் கையில் கிடைத்த கல்லை எடுத்து எறிய அது ஒருவன் கபாலத்தை பதம் பார்த்தது. குருவை இரண்டு வாரம் சஸ்பெண்ட் செய்தார்கள். அதன் பின் அனிதா என்னுடன் எப்போதும் பேசிக்கொண்டிருப்பாள், எங்களிருவரிடையில் ஒரு நல்ல வேதியல் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அது காதலாக மாறும் தருவாயில், குருவின் ரீஎண்ட்ரி. 

சஸ்பென்ஷன் முடிந்து வருகையில் கையில் கட்டுடன் வந்தான். கல்லெறிந்த கையை உடைத்துவிட்டனர். நேராக அனிதாவிடம் சென்று அமர்ந்தவன் சிம்பதி சிம்பொனி வாசிக்க, அவள் ஆழ்மனதில் நான் அடித்துவைத்திருந்த ஆணிகளெல்லாம் தேவையில்லாததாய் போனது. அதன் பிறகு அவள் என்னுடன் பேசுவது குறைந்தது. அந்த வருடம் விடுமுறையில் இண்டர்ன்ஷிப்பிற்காக டெல்லி சென்றிருந்தாள். திரும்பி வந்தவளிடத்தில் நிறைய மாற்றம். என்னிடமும் பேசுவதில்லை. அவளும் குருவும் காதலிப்பதாக கீர்த்தனா சொன்னாள். டெல்லி இண்டர்ன்ஷிப்பில் இருவருக்குமிடையே இயற்பியல் பரிமாற்றம் இருந்ததாக பல வதந்திகள் அவ்வப்போது வரும்.

இப்போது சப்பாத்தி வந்தது. பின்னாலேயே குரு வந்தான். அவனைப் பார்த்ததும் அனிதா எழுந்து “ஹாய் டா” என்றபடி கைநீட்டினாள். நீட்டிய கையில் ஒரு சிகப்பு ரோஜைவைக் கொடுத்துவிட்டு. “Happy valentine's day dear, you look pretty gorgeous" என்றான். 

முகமெல்லாம் பற்கள் தெரிய “தேங்க்ஸ்” என்றாள் அனிதா. இருவரும் அமர்ந்தனர். 

குரு “ என்ன மச்சான், நீ உன் லவ்வர பாக்க போலையா?” என்றபடி சப்பாத்தியை திண்ண ஆரம்பித்தான். நான் அவனை முறைத்தேன்.

“ஓகே ஒகே கூல், சாப்பிடு”

“எனக்கு பசிக்கல, நான் கெளம்பறேன். you people have fun" ஹோட்டலை விட்டு வெளியேறினேன். 

 எங்கு செல்வதென்று தெரியவில்லை. இலக்கில்லாமல் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தேன். பூங்காவிற்குள் நுழைந்தவன் வெளியே வருவதற்குள் ஏக்கச்செக்க மாதொருபாகன்களைப் பார்த்திருந்தேன். மீண்டும் ஹாஸ்டலை நோக்கி நடக்கையில் மணி 9.00.  செல்லும் வழியில் தெருமுக்கில் யாஸ்மின் நின்றிருந்தாள். 

யாஸ்மின். கருப்பு புர்க்காவில் வரும் தேவதை. இந்த வருடம் தான் எங்கள் கல்லூரியில் சேர்ந்திருந்தாள். முதல் நாள் ராகிங்கில் இரண்டாமாண்டு மாணவர்கள் அவளை மடக்கி வம்பிழுக்கையில் அவர்கள் தவடாவிலேயே போட்டு அவளை மீட்டுக்கொண்டு வந்தேன். அதன்பின் அவளை காதலிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்திலிருக்கையில். அவள் கடைக்கண் பார்வைகளும், இதழோரச் சிரிப்பும் கண்டு அவளும் என்னைக் காதலிப்பதாகத்தான் தோன்றியது. ஆனால் அவள் இங்கே இந்நேரத்தில் என்ன செய்கிறாள். அவளருகே சென்றேன்.  

“இவ்வளவு லேட்டாவா வரது, எத்தன நேரம் வெய்ட் பன்றது?” நடந்து வந்து கொண்டிருந்த என்னைப் பார்த்துதான் கேட்கிறாளென நான் நினைப்பதற்குள். 
என் தோளை இடித்துக்கொண்டு ஒருவன் வந்து அவள் முன் நின்று.
“சாரி மா, ரொம்ப ரொம்ப சாரி. போலாமா?” என்றான். 
அவள் தலையாட்டி அவன் கையைப் பிடித்து நடக்கலானாள். என் கோபம் தலைக்கேறியது. எதையும் யோசிக்காமல் நேராக நடந்தவன் நின்றது டாஸ்மாக் வாசலில். கையிலிருந்த காசுக்கெல்லாம் பீர் வாங்கிக் குடித்துவிட்டு. ஹாஸ்டலுக்குத் திரும்பினேன். 

ஹாஸ்டல் வாசலில் கீர்த்தனா. . அவளுக்கும் எனக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். ஐந்து நிமிடம் நின்று பேசினால் சண்டையிட்டுக் கொள்வோம். காரணமே இல்லாமல் சண்டைபோட்டு கண்டபடி திட்டிவிட்டுப் போவாள், மறுபடி வந்த அப்படி ஒரு சண்டையே நடக்காததுபோல் பேசுவாள். அதனாலேயே அவளைப் எனக்குப் பிடிக்கும். அவளுக்கும் தான். யோசித்துப் பார்த்தாள், கல்லூரியில் நான் அதிகம் பேசியது இவளுடனாகத்தானிருக்குமென்று தோன்றுகிறது. மணி 11.50. கையைக்கட்டி, சுவரில் சாய்ந்து நின்று நான் வருவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். தெருவிளக்கு வெளிச்சத்தில் யட்சியைப் போல் காட்சியளித்தாள். 

”வாங்க சர், இதுதான் ஹாஸ்டல் வர நேரமா?” இடது புருவத்தை உயர்த்திக் கேட்டாள். வாட்ச்மேன் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருந்தார்.
“அதெல்லாம் எப்படி உள்ள போறதுன்னு எனக்கு  தெரியும். இந்நேரத்துல, நீ என்ன பன்னுற இங்க?” 
“ காலேஜுல அம்மாஞ்சி மாதிரி இருந்துட்டு செய்யுறதெல்லாம் fraud வேல, உங்கிட்ட என்னடா சொன்னேன். 6 மணிக்கு ஹாஸ்டலுக்கு வர்றதா சொல்லியிருந்தேன்ல” 
“ஸ்ஸ்ஸ்... மறந்துட்டேன், என்ன விஷயம்??” என்றேன்
“போன ஏன் ஆப் பண்ணி வெச்சுருக்க?”
“அது... காலைல இருந்தே... சார்ஜ் இல்ல” உளரினேன்
மூக்கை உரிஞ்சியவள் “ குடிச்சிருக்கியா நாயே??” ஆரம்பித்துவிட்டாள் இனி விடியும் வரை சண்டைபோடுவாள். 
நான் “ ஆமா” என்பதைப் போல் தலையாட்டினேன். 

ஓங்கி ஓர் அறை விட்டாள். போதையெல்லாம் இறங்கியதுபோலிருந்தது. தலையை உலுக்கிக்கொண்டு நிமிர்ந்தேன். அவள் கண்கள் பனித்திருந்தது. 
“ நீ என்ன செஞ்சாலும் கேக்குறதுக்கு ஆள் இல்லன்னு நெனச்சியா?, கொன்றுவேன். இந்தா இதக் கொடுக்கத்தான் ஆறு மணி நேரம் காத்துட்டுருந்தேன்” என்றவள் ஒரு Greeting Cardஐ என்னிடம் நீட்டினாள்.
HAPPY BIRTHDAY மேலே என்று எழுதியிருந்தது.   
“இங்க பார். நீதான் உனக்கு யாரும் இல்லன்னு நெனச்சுட்டு இருக்க. புரியுதா?, என்றவள் கண்களைத் துடைத்துக் கொண்டு திரும்பி நடந்தாள். ஒன்றும் புரியாதவனாக திகைத்து நின்றேன். என்ன செய்வதென்று தெரியவில்லை.
Greeting Card ஐ திறந்தேன். பீத்தோவனின் சிம்பொனி ஒலித்தது. உள்ளிருந்த காகிதத்தில் I Love You Appu. 

நான் அவள் சென்ற திசையைப் பார்த்தேன். நடந்துசென்றவள் திரும்பிப்பார்த்து சிரித்தாள். கவிதையாயிருந்தது. ஓடிச்சென்று அவள் கைகளைக் கோர்த்துக்கொண்டேன். ஹாஸ்டல் மணிக்கூண்டைப் பார்த்தேன் 14.02.2014.11:59: 50,51,52  இதோ என் முதல் காதலர் தினம் முடிந்துகொண்டிருக்கிறது. 57,58,59., நான் ஒரு சபிக்கப்பட்ட தேவதூதன்.

Tuesday, January 27, 2015

சிகரெட் தேவதை




"I think this is my masterpiece"
A film by Quentin Tarrantino.
இன்ங்லோரியஸ் பாஸ்டர்ட்ஸை எட்டாவது முறையாக பார்த்து முடித்ததும் லேப்டாப்பை மூடிவைத்து விட்டு ஜன்னைலை திறந்தேன், கிழக்கு சிவந்திருந்தது. கொட்டாவி விட்டுக்கொண்டே சோம்பல் முறித்தேன். படுக்கையில் தேடி கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன், மணி 5.30. எழுந்து பர்சை எடுத்து பாக்கெட்டில் திணித்துக்கொண்டு ரூமிலிருந்து வெளியே செல்கையில் செல்வத்தின் காலை மிதித்துவிட்டேன். அவன் முனகிக்கொண்டே புரண்டு படுத்தான். வெளியே வந்து பார்க்கும்போது வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. நாயர் கடைக்கு சென்று ஒரு டீ சொல்லிவிட்டு ஒரு சிகெரெட்டை வாங்கி வாயில் வைத்து லைட்டைரை தேடினேன்.
நாயரேட்டா லைட்டர் எவடயா?”
கழுவேரிட மோன் எவனோ பொக்கிக்கோண்டு போயடா, இந்நாஎன்று என்னிடம் தீப்பெட்டியை வீசினார். உள்ளே ஒரே ஒரு தீக்குச்சி மட்டுமே இருந்தது. எடுத்து சிகரெட்டை பற்ற வைத்துவிட்டு கடையின் வலப்புறம் சென்று நின்றேன். ஒரு லைட்டருக்காக நாயர் அப்படி திட்டியிருக்க வேண்டாம் என்று தோன்றியது. பின் அவர் திட்டயது லைட்டருக்காக அல்ல திருட்டுக்காக என்று புரிந்தது. சொல்லமுடியாது அவரே மறதியில் எங்கேனும் வைத்திருக்கலாம்.
நாயர் என்னிடம் டீயை கொடுத்தார். நான் வாங்கிக்கொண்டேன், என் கண்கள் செய்தித்தாள்களை தேடின.
பேப்பர் இனியும் வந்நட்டில்லடாஎன்றார் நாயர். நான் தலையாட்டிவிட்டு டீயைக் குடிக்கத் தொடங்கினேன்.
துர்கை அம்மன் கோவிலில் மணியடிக்கும் சத்தம் கேட்டு கோவிலை ஏறிட்டேன். கருநீல புடவை கட்டிய பெண்ணொருத்தி கோவிலிலிருந்து வெளியே வந்தாள். (இனி நடப்பதை slow motionல் கற்பனை செய்துகொள்ளவும்) வெளிய வந்தவள் திரும்பி கோவிலுக்குள் நோக்கி தன் சுட்டுவிரலை மடக்கி முத்தமிட்டாள். பின் காலணிகளை மாட்டிக்கொண்டு நாயர் கடை பக்கம் வந்தாள். காற்றில் அலைபாயும் கூந்தல், கழுத்தில் id card, தோளில் மாட்டிய handbag சகிதம் ஒரு அழகி நடந்து வரும்போது, பரட்டை தலையுடன் பல் கூட துலக்காமல் ஒரு கையில் டீ மறுகையில் சிகெரட் சகிதமாய் நிற்பது ஒரு மாதிரி சங்கடமாய் தானிருந்தது. ஆனால் ஒய்யாரமாய் மயிலென அவள் நடந்துவருவதைக் கண்டு அதையெல்லாம் மறந்தேன். அவள் வயது, எடை, உயரத்தையெல்லாம் கணக்கிடும் அளவிற்கு எனக்கு மதிநுட்பமில்லாததால் மேற்கொண்டு அவளை வர்ணிக்கமுடியவில்லை. அவள் அழகி. அழகி என்றால் சாதாரன அழகியல்ல, அழகிக்கும் பேரழகிக்கும் இடைப்பட்ட ஓர் அழகு. பார்த்தவுடன் எந்த யோசனையுமின்றி காதலிக்கலாம். நேரே கடைமுன் வந்து நின்றாள் (slow motion ends).
அவளைப் பார்த்து நாயர் சினேகமாக சிரித்தார். அவளும் பரிச்சயமாக புன்னகைத்தாள். அவள் கேட்காமலேயே நாயர் அவளிடம் காபியை கொடுத்தார். வாங்கிக்கொண்டவள் இரு கைகளாலும் பொத்திப்பிடித்து பருகத்தொடங்கினாள். தேவதை என்று ஒன்று இருந்தால் அது இப்படித்தான் காபி குடிக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.
கடைக்குள்ளே சென்ற நாயர் திரும்பி அவளிடம் வந்து ஒரு சிகெரெட்டை நீட்டினார். சிகரெட்டை வாங்கிக்கொண்டவள் காபியை அருகே வைத்துவிட்டு பையிலிருந்து ஒரு ஐநூறு ரூபாய் தாளை நாயரிடம் கொடுத்தாள். நாயர் சில்லரை இல்லையா என்று கேட்க அவள் இடவலமாக தலையசைத்தாள்.
நாயர் அவளிடம் இருந்து காசை வாங்கிக்கொண்டு எதிரிலிருக்கும் கடைக்கு சில்லரை மாற்றிக்கொண்டு வர போனார். சிகெரட்டை வாயில் வைத்து தீப்பெட்டியை திறந்தவள் பெட்டியில் தீக்குச்சி இல்லாததால் திரும்பி நாயரைப் பார்த்தாள். அவர் இன்னும் வந்திருக்கவில்லை. திரும்பி கடைக்குள் பார்த்தவள் பார்வை என்னிடம் திரும்பியது. என் கையிலிருந்த சிகெரெட்டை கவனித்தவள் அருகில் வந்து
”match box இருக்கா?” என்றாள்.
நான் இல்லையென தலையசைக்க, கையில் இருந்த சிகெரெட்டைப் பார்த்தாள். நான் என் கையை நீட்ட, என் கையிலிருந்து சிகெரெட்டை வாங்காமல் அப்படியே அவள் சிகெரெட்டை பற்ற வைத்துக்கொண்டாள்.
“thanks" என்று சிரித்தவள். திரும்பி சென்று காபியை ஒரு கையில் எடுத்துக்கொண்டு கடைக்கு இடப்புறம் இருந்த மறைவான இடத்தில் போய் நின்றுகொண்டாள்.
சில்லரை வாங்கிவந்த நாயர் அவளிடம் மீதி பனத்தைக் கொடுக்க சிகெரெட்டை வாயில் வைத்துக்கொண்டு காசை வாங்கி பையில் போட்டுக்கொண்டு சிகெரெட்டை எடுத்துவிட்டு காபியை குடித்தவள் அதன் பின்னர் புகையை வெளியே விட்டாள். சென்னை வந்த பின்னர் பெண்கள் புகைப்பிடப்பதை பலமுறைப் பார்த்திருந்தாலும் இந்த வித்தையை நான் வியந்த வண்ணம் பார்க்க அவள் மீண்டும் புகையை உள்ளிழுத்துக் கொண்டு காபியை விழுங்கிய பின்னர் புகையை வெளியே விட்டாள். இத்தனை நாட்களில் இதை ஒருநாள் கூட முயன்றதில்லையே என்று நானும் அதேபோல் செய்ய புரையேறியது போல் இருமல் வந்தது. அவள் அசட்டையாக என்னை பார்த்து விட்டு திரும்பினாள். நான் தேவதை என்று ஒன்று இருந்தால் அது இப்படித்தான் புகைப்பிடிக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.